ஔவையின் கொன்றை வேந்தன்
    கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
    என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

  • அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்
  • ஆலயம் தொழுவது சாலவும் நன்று
  • இல்லறம் அல்லது நல்லறம் அன்று
  • ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
  • உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
  • ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
  • எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
  • ஏவா மக்கள் மூவா மருந்து
  • ஐயம் புகினும் செய்வன செய்
  • ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
  • ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
  • ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
  • அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

  • கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை
  • காவல் தானே பாவையர்க்கு அழகு
  • கிட்டாதாயின் வெட்டென மற
  • கீழோர் ஆயினும் தாழ உரை
  • குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
  • கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
  • கெடுவது செய்யின் விடுவது கருமம்
  • கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
  • கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி
  • கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
  • கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
  • கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

  • சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
  • சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு
  • சிவத்தைப் பேணல் தவத்திற்கு அழகு
  • சீரைத் தேடின் ஏரைத் தேடு
  • சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
  • சூதும் வாதும் வேதனை செய்யும்
  • செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
  • சேமம் புகினும் யாமத்து உறங்கு
  • சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
  • சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
  • சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

  • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
  • தாயிற் சிறந்ததொரு கொயிலும் இல்லை
  • திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
  • தீராக் கோபம் போராய் முடியும்
  • துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
  • தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
  • தெய்வம் சீறின் கைதவம் மாளும்
  • தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
  • தையும் மாசியும் வையகத்து உறங்கு
  • தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது
  • தோழனோடும் ஏழைமை பேசேல்

  • நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
  • நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை
  • நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
  • நீரகம் பொருத்திய ஊரகத்து இரு
  • நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
  • நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
  • நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
  • நேரா நோன்பு சீராகாது
  • நைபவர் எனினும் நொய்ய உரையேல்
  • நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
  • நோன்பு என்பது கொன்று தின்னாமை

  • பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
  • பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
  • பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
  • பீரம் பேணில் பாரம் தாங்கும்
  • புலையும் கொலையும் களவும் தவிர்
  • பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
  • பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
  • பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
  • பையச் சென்றால் வையம் தாங்கும்
  • பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்
  • போனகம் என்பது தான் உழந்து உண்டல்

  • மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
  • மாரி அல்லது காரியம் இல்லை
  • மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
  • மீகாமண் இல்லா மரக்கலம் ஓடாது
  • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
  • மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
  • மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
  • மேழிச் செல்வம் கோழை படாது
  • மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
  • மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
  • மோனம் என்பது ஞான வரம்பு

  • வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
  • வானம் சுருங்கில் தானம் சுருங்கும்
  • விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
  • வீரன் கேண்மை கூர் அம்பாகும்
  • உரவோர் என்கை இரவாது இருத்தல்
  • ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு
  • வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
  • வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை
  • வைகல் தோறும் தெய்வம் தொழு
  • ஒத்த இடத்து நித்திரை கொள்
  • ஓதாவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்