ஔவையின் நல்வழி
    பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
    நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
    சங்கத் தமிழ்மூன்றும் தா

1 புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணும்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

2 சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

3 இடும்பைக்கு இடும்பை இயல்புடம்பு இதுஅன்றே
இடும்பொய்யை மெய்யென்று இராதே - இடும்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு

4 எண்ணி ஒருகருமம் யார்க்கும் செய்ய ஒண்ணா(து)
புண்ணியம் வந்தெய்த போதலால் - கண்ணில்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு

5 வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

6 உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக்
கடல்ஓடி மீண்டு கரையேறி னால்என்
உடலோடு வாழும் உயிர்க்கு

7 எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை - நல்லோர்
அறிந்திருப்பர் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு

8 ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்

9 ஆற்றுப்பெருக்கு அற்றடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லைஎன மாட்டார் இசைந்து

10 ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ மாநிலத்தீர் - வேண்டாம்
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்குஎன் என்றிட்டுண்(டு) இரும்

11 ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்(கு) ஏல்என்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது

12 ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு

13 ஆவாரை யாரே அழிப்பார் அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்

14 பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பலசொல்லி இடித்துண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

15 சிவாய நமஎன்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும் இல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்

16 தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி

17 செய்த தீவினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவம் என்னறிந்து அன்று இடார்க்(கு) இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்

18 பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேட்டார் - மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணம் கொடுத்தாலும் தரம்

19 சேவித்தும் சென்றிரந்தும் தெண்நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்போம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்

20 அம்மிதுணை யாகஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும்

21 நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சகமில் லார்க்கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்

22 பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயின் பின்புயாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் ப்ணம்

23 வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் கொன்னார் மனை

24 நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறுஇல்
உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை

25 ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

26 மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்

27 ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்(டு) ஒன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்

28 உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைத்(து) எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்

29 மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்

30 தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தாமரை யோன்பொறி வழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி

31 இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடா நோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி

32 ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து

33 வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப்பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்

34 கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்(று) உண்டாயின்
எல்லாரும் சென்றங்(கு) எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்(று)ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்

35 பூவாதே காய்க்கும் மரமுமுள் மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு

36 நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்டகரு அழிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீஇ
போதம் தன்ம்கல்வி பொன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்

37 வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய் நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவாக்(கு) இல்லை விதி

38 நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமா சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்

39 முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளை
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு

40 தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலம் சொல்லும்
ஒருவா சகமென்று உணர்